நஜ்முத்தீன் அய்யூப் இராக்கின் திக்ரீத் நிலப்பகுதியை ஆண்டு வந்து சிற்றரசர், இஸ்லாமிய ஆட்சியாளர்.
திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு நாள் அவருடைய மூத்த சகோதரர் அஸதுத்தீன் என்பவர் தம் சகோதரர் நஜ்முத்தீன் அய்யூபியை அணுகி “ஏன், இன்னும் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றீர்கள்? என்று கேட்டார்.
அதற்கவர், ”எனக்கான சரியான துணை இன்னும் அமையவில்லை, ஆகையால் தான் காலதாமதம் செய்து வருகின்றேன்” என்றார்கள்.
அப்படியானால், உமக்காக நான் பெண் பார்க்கின்றேன்! ஸல்ஜூக்கிய மன்னர்களின் குடும்பத்தில் பார்க்கட்டுமா? இல்லை, அப்பாஸிய மன்னர்களின் குடும்பத்தில் பெண் பார்க்கட்டுமா? என்று அரசக்குடும்பம் என்ற மிடுக்கோடு நஜ்முத்தீன் அய்யூபியிடம் கேட்டார்கள்.
அப்போது, நஜ்முத்தீன் அவர்கள் அரசக் குடும்பப் பெண்கள் எல்லாம் எம் இலட்சியத்திற்கு தோதுப் படமாட்டார்கள். ஆகவே, எனக்கான சரியான துணையாகவும் அவர்கள் இருக்கமாட்டார்கள் என்றார்கள்.
பேரரசர்களின் குடும்பப் பெண்களே உங்களுக்கு பொருத்தமான துணையாக அமையாது எனும் போது எங்கிருந்து உமக்கு பொருத்தமான துணையைத் தேடுவது? என ஆச்சர்யம் விலகாமல் அஸதுத்தீன் நஜ்முத்தீன் அய்யூபியிடம் கேட்டார்.
என் துணைவி எப்படி இருக்க வேண்டும்? என்று நான் மிகப் பெரிய லட்சியக் கனவோடு தேடிக் கொண்டிருக்கின்றேன்.
இதோ! சொல்கின்றேன் கேள் என் சகோதரரே! எனக்கு மனைவியாக வருகின்றவள், என் கையைப் பற்றிப் பிடித்து என்னை (நாளை மறுமையில்) சுவனச் சோலைக்குள் அழைத்துச் செல்பவளாய் இருக்கவேண்டும்.
அவள் மூலம் ஆண் வாரிசு ஒன்று கிடைக்க வேண்டும். அந்த வாரிசை ஒழுக்க மாண்புள்ளவனாகவும், மாபெரும் குதிரை வீரனாகவும் வளர்த்து ஆளாக்கி, அந்த வாரிசின் மூலம் இந்த உம்மத்தின் மிகப் பெரும் பாக்கியமான பைத்துல் முகத்தஸ் சிலுவைப் படை வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் முஸ்லிம்கள் வசம் ஆக வேண்டும்.
இது தான் நான் தேடிக்கொண்டிருக்கும் என் வாழ்க்கைத் துணைவிக்கான தகுதி” என்று கூறினார்கள்.
இதுகேட்ட அஸதுத்தீன் “இப்படியான லட்சிய வேட்கை கொண்ட பெண்ணை எங்கு சென்று தேடுவது? என்று ஆச்சர்யம் மேலிட வினவினார்.
அதற்கு, நஜ்முத்தீன் அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காக தூய எண்ணம் கொள்வாரோ அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்” என்று பதில் கூறினார்கள்.
இந்த உரையாடல் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர் திக்ரீத்தின் பகுதியில் பிரபல்யமாகியிருந்த ஒரு ஷைகிடம் நஜ்முத்தீன் அய்யூபி அவர்கள் வந்தார்கள்.
சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, திரைக்கு அப்பால் இருந்து ஒரு பெண்மணி ஷைகிடம் சிறிது நேரம் பேச அனுமதி வேண்டினார்.
ஷைக் அவர்கள் அப்பெண்மணியின் குரலை வைத்து அடையாளம் கண்டு கொண்டு, அனுமதி வழங்கிய பின் “பெண்ணே! உம்மைப் பெண் பார்க்க ஓர் இளைஞரை நான் நேற்று வரச் சொன்னேனே நீ ஏன் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டாய்? என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண் “ஷைக் அவர்களே! அந்த இளைஞர் அழகானவர் தான், அந்தஸ்து உடையவர் தான் ஆனாலும் பேசிப்பார்த்ததில் எனக்கான சரியான துணையாக அவர் இல்லை, என் லட்சியத்திற்கும், என் கனவிற்கும் உகந்தவராய் அவர் இல்லை ஆகவே, அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டேன்” என்று பதில் கூறினாள் அப்பெண்மணி.
அப்படி என்னம்மா உன் கனவும், லட்சியமும்? என்று ஆச்சர்யத்தோடு வினவினார்கள் ஷைக் அவர்கள்.
அப்பெண்மணி “என் வாழ்க்கையைத் துணையாக வரும் என் கணவர் இவ்வுலகில் மாத்திரமல்ல நாளை மறுமையில் சுவனத்திலும் என் துணையாக இருக்க வேண்டும். அவரே என்னை சுவனத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டும்.
அவர் மூலம் ஆண் வாரிசு ஒன்று கிடைக்க வேண்டும். அந்த வாரிசை ஒழுக்க மாண்புள்ளவனாகவும், மாபெரும் குதிரை வீரனாகவும் வளர்த்து ஆளாக்கி, அந்த வாரிசின் மூலம் இந்த உம்மத்தின் மிகப் பெரும் பாக்கியமான பைத்துல் முகத்தஸ் சிலுவைப் படை வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் முஸ்லிம்கள் வசம் ஆக வேண்டும்.
இது தான் என கனவும், லட்சியமும் என் வாழ்க்கைத் துணைவருக்கான தகுதியும் ஆகும்” என்று கூறினார்.
இதைக் கேட்ட நஜ்முத்தீன் அய்யூபி அவர்கள் மகிழ்ச்சியில் அல்லாஹு அக்பர் என்று கூறி விட்டு, நாம் தேடிய தகுதியோடும் நம்மைப் போன்ற கனவோடும், லட்சியத்தோடும் நாம் வாழ்கிற ஊரிலேயே அல்லாஹ் நமக்கான ஜோடியைப் படைத்திருக்கின்றான் என்ற உணர்வோடு ஷைக் அவர்களிடத்தில் “ஷைக் அவர்களே! இந்தப் பெண்ணையே நீங்கள் எனக்குப் பேசி திருமணம் செய்து வையுங்கள்!” என்று கூறினார்கள்.
அதற்கு ஷைக் அவர்கள், நஜ்முத்தீன் நீர் நாடாளும் ஓர் ஆட்சியாளர், அப்பெண்ணோ உனக்கு நேர் எதிரான நிலையில் வாழும் ஓர் ஏழை” எப்படி இது சாத்தியமாகும் என்று வினவினார்கள்.
ஒரு வழியாக ஷைக் அவர்களின் முயற்சியால் இருவருக்கும் திருமணமும் நடந்தேறியது.
அந்த கனவுத்தம்பதியருக்கு, லட்சியத்தம்பதியருக்கு பிறந்த மாவீரர் தான் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த அபுல் முளஃப்ஃபர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ஆவார்கள்.
அல்லாஹ் அத்தம்பதியரின் ஒரு லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுத்தான். இன்ஷாஅல்லாஹ் இன்னொரு லட்சியத்தையும் நாளை மறுமையில் சுவனத்தில் நிறைவேற்றியருள்வானாக! ஆமீன்!.
மாநபி {ஸல்} அவர்களின் புனித பாதங்களை மதீனாவின் மண் முத்தமிட்ட முதல் தருணம் அது.
நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குள் அபூஅய்யூப் அன்ஸாரி ரலி அவர்களின் வீட்டிற்குள் வீற்றிருந்த தருணம் அது.
மதீனாவின் அன்ஸாரி ஆண்களும் பெண்களும் அண்ணலாரைச் சந்தித்து முகம் மலர அகம் குளிர அன்பளிப்புகளை ஒருவர் பின் ஒருவராக வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தூரத்தில் ஒரு பெண்மணி கையில் ஒரு சிறுவனைப் பிடித்துக் கொண்டு இதை ஒரு ஓரமாக நின்று அவதானித்துக் கொண்டு நிற்கின்றார்.
இஸ்லாத்தை ஏற்றதற்காக தம்மை விட்டும் ஓடிய கணவன், போன இடத்திலேயே இறந்தும் போய் விட்டான். கையில் ஒரு ஆண்மகனை கொடுத்து விட்டு சென்று விட்டான்.
என்ன செய்வது? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லாம் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். நாம் கொண்டு போய் கொடுக்க நம்மிடம் என்ன இருக்கின்றது என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றார்.
திடீரெனெ மனதினுள் மின்னல் போல் பளிச்சிட தம் மகனை அழைத்துக் கொண்டு அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடக்கின்றார்கள்.
நடந்த மீதி விஷயங்களை அவரின் மகனார் சொல்வதன் மூலம் அறிந்து கொள்வோமே!?
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவில் வந்திறங்கிய தருணம் அது.
எட்டு வயது நிரம்பியவனாக இருந்த என்னை அழைத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களின் முன்னால் வந்து நின்ற என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! மதீனாவின் ஆண்களும், பெண்களும் உங்களுக்கு அவர்களின் சார்பாக அன்பளிப்புகளை வழங்கியதை நான் கண்ணுற்றேன்.
அல்லாஹ்வின் தூதரே! இந்த என் மகனைத் தவிர வேறெந்தச் செல்வமும் என்னிடம் இல்லை.
இதோ! நபியே! என் மகனை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்! பூமியில் நீங்கள் வாழும் காலம் வரை உங்களுக்கு என் மகன் சேவகம் செய்வான்” என்று கூறி என்னை நபி {ஸல்} அவர்களிடம் கொடுத்தார்கள்.
நானும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிர் வாழும் காலம் வரை நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்திருக்கின்றேன். ஆனால், ஒரு நாள் கூட நபி {ஸல்} அவர்கள் முகம் சுழிக்கவோ, திட்டவோ, அடிக்கவோ இல்லை” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அபூயஃலா 3624 )
குத்ஹு யாரசூலுல்லாஹ்… இதுவரை அந்த மண்ணில் மாநபி {ஸல்} அவர்களுக்கு இப்படியான அன்பளிப்புகளை எவரும் வழங்கியிருக்க வில்லை.
இன்னும் சொல்லப்போனால் மாநபி {ஸல்} அவர்களுக்காக எதையும் அர்ப்பணம் செய்கிற புது அத்தியாயத்தை துவக்கி வைத்தவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களே!.
ஒரு புறம்….தந்தை இல்லை, தாய் மட்டுமே ஆதரவு என்கிற நிலையில் இருந்த சிறு பாலகர் அனஸ்… குத்ஹு யாரசூலுல்லாஹ் என்கிற ஒற்றை வார்த்தையின் மூலம் இனி அனஸ் பெருமானார் {ஸல்} அவர்களுக்குச் சொந்தமானார்.
இன்னும் சொல்லப்போனால், இந்த நிகழ்வு பெருமானார் {ஸல்} அவர்களை அனஸ் (ரலி) அவர்கள் முதன் முதலாக பார்த்த அடுத்த கனம் நடந்தேறுகின்றது.
தாயாரின் விருப்பத்திற்கிணங்க, எவ்வித மறுப்பும் ஆர்ப்பாட்டமும் செய்யாமல் மாநபி {ஸல்} அவர்களுக்கு சேவகம் செய்ய ஆயத்தமாகின்றார்.
இன்னொரு புறம்… கணவர் இறந்து போனார், அவரின் நினைவாகவும், ஆதரவாகவும் இருக்கும் ஒரேயொரு மகன் அனஸ்.
எனினும் அகிலத்தின் அருட்கொடைக்கு அன்பளிப்பு வழங்க அல்லாஹ் வழங்கிய கொடையான அனஸை தவிர வெறெதுவும் இல்லாத போது, அல்லாஹ் வழங்கிய அந்தக் கொடையையே அகிலத்தின் அருட்கொடைக்கு முன் அர்ப்பணித்தார்கள்.
குத்ஹு யாரசூலுல்லாஹ்…. அன்றையப் பொழுதில் அல்லாஹ்வை அகமகிழச் செய்த வார்த்தைகள் அவை.
இருவருக்கும் அல்லாஹ் வழங்கிய கௌரவங்களும், அங்கீகாரங்களும் தான் எத்தனை? எத்தனை?
அபூதல்ஹா எனும் அழகிய மணாளரை அல்லாஹ் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு வழங்கினான்.
நபிகளார் காலத்திற்கு பின்னர் அன்றைய முஸ்லிம் உம்மாவின் சிறந்த முன்மாதிரி தம்பதியர்களாக அதிகம் பேசப்பட்ட, புகழப்பட்ட தம்பதியர்கள் உம்மு ஸுலைம் – அபூதல்ஹா தம்பதியரே!
புகழும், மார்க்க அறிவும் நிறைந்த சந்ததிகளை அல்லாஹ் அத்தம்பதியருக்கு வழங்கினான்.
நபிகளாரின் அமுதவாயால் சுவனத்துப் பெண்மணி என்ற சோபனத்தையும் அல்லாஹ் வழங்கினான்.
அல்லாமா சுயூத்தீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகிய இருவருக்குப் பின்பு நபிகளாரிடம் இருந்து அதிக அறிவிப்புகளை இந்த உம்மத்திற்கு தந்தவர்கள் அனஸ் (ரலி) அவர்கள்.
2286 நபி மொழிகளை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் வேறெந்த நபித்தோழர்களும் அறிவித்திராத பல புதிய செய்திகளை இந்த உம்மத்திற்கு வழங்கியவர்கள்.
வாழும் காலத்திலேயே ஈமான் ஸலாமத் கொண்ட மூன்று தலைமுறையைக் காணும் பாக்கியத்தையும், அளவிலா செல்வ வளத்தையும், முதுமையிலும் இளமையின் தோற்றத்தையும், நபிகளாரைப் பார்த்தவர்களில், பழகியவர்களில் இறுதியில் மரணித்தவர் என்கிற புகழையும், நூற்றுக்கும் மேற்பட்ட ரமழானை அடையும் பாக்கியத்தையும், நோன்பு நோற்கும் பாக்கியத்தையும் அல்லாஹ் வழங்கினான்.
தாயாருக்கும், மகனுக்கும் இவ்வளவு பெரிய கௌரவத்தை வழங்கியது “குத்ஹு யாரசூலுல்லாஹ்… என்கிற ஒற்றை வார்த்தை தான் என்றால் அது மிகையல்ல.
ஆகவே, உயர்ந்த லட்சியங்களும், குறிக்கோள்களும் மறுமையை நோக்கமாகக் கொண்டு அமைப்போம்!
அல்லாஹ் அளிக்கும் உயர்ந்த சன்மானங்களையும், கௌரவங்களையும் ஈருலகிலும் பெறுவோம்!
அபாபீல்களாகவும், ஹுத்ஹுத்களாகவும் வாழ்வோம்!!
( குர்ஆன் சூரத்துல் அந் நம்ல் 27:21-28 ) குர்ஆனில் இடம் பெற்றுள்ள ஹுத் ஹுத் பறவைக்கும் சுலைமான் (அலை) அவர்களுக்கும் இடையே உண்டான உரையாடல் .
ஹுத்ஹுத் பறவையை இன்று காணவில்லையே என்று தேடிகொண்டிருந்த சுலைமான் (அலை) அவர்கள் அது வருவதில் தாமதமானதால் அப்பறவை மீது கோபம் கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.அப்போது அது கூறியது ““தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
“நிச்சயமாக அந்த தேசத்தில் ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்;மேலும் அவளுக்கு பல பொருட்களும் மகத்தான அரியனையும் இருப்பதை கண்டேன் .
அவளும் அவளுடைய சமூகமும் அல்லாஹுவை வணங்காமல் , சூரியனை வணங்குகின்றனர் .ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.என்று ஹுத் ஹுத் பறவைகூறியது.
அப்பறவையை பார்த்து சுலைமான் (அலை)அவர்கள் கூறிய வார்த்தைகளை கவனியுங்கள் அதில் தான் நான் கூறவரும் படிப்பினை உள்ளது .
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
அதன்பின் அப்பறவையிடம் கடிதத்தை அனுப்பிவைப்பார்கள்
பிறகு நடந்த விடயங்களை குர்ஆனின் தொடர்ச்சியில் பார்க்கலாம்.
இந்த உரையாடலில் ஹுத் ஹுத் பறவை தான் கூறவந்த செய்தியை கூற ஆரம்பிக்கும் பொழுதே உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
என்றது, எனினும் அதுகூறிய செய்திகேட்டு சுலைமான் (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை பாருங்கள் “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்”
இதில் தான் நமக்கு மாபெரும் படிப்பினை உள்ளது
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِ
யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(அல்குர்ஆன் : 105:1)
اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ
அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா?
(அல்குர்ஆன் : 105:2)
وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான்.
(அல்குர்ஆன் : 105:3)
تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ
அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன.
(அல்குர்ஆன் : 105:4)
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ
பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.
(அல்குர்ஆன் : 105:5)