நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, டிசம்பர் 12, 2020

முட்டாள்களிடம் எப்படிப் பேசுவது

முட்டாள்களிடம் எப்படிப் பேசுவது

அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, முட்டாள்களிடம் பேசுவது எப்படி? என்று கேட்டார்.

திடீரென்று இப்படி ஒரு கேள்வியை மன்னர் கேட்பார் என்று எதிர்பார்க்காத பீர்பால், அரசே, இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார்.

மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போல் செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.

அவனும் சரி என்றான். உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் செய்து வைப்பேன். உன்னிடம் மன்னர் சில கேள்விகளைக் கேட்பார். மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ மவுனமாகவே நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார். இருவரும் மன்னரைப் பார்க்கப் புறப்பட்டனர்.

பீர்பால், மன்னரிடம் அவனை அழைத்து சென்று அரசே, இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன். தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும், இவனால் உடனடியாகப் பதில் கூற முடியும்! என்று கூறி அவனை மன்னரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் கேட்டார்.

மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது, பீர்பால் சொன்னபடி அவன் மவுனமாக நின்றிருந்தான். மன்னர் பலமுறை கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனமாகவே இருந்தான்.

பீர்பாலிடம், என்ன உங்கள் உறவினர் நான் பலமுறை கேட்டும் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.

உடனே பீர்பால், அரசே தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.

அக்பர், நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான். மவுனமாகவே நின்று கொண்டிருக்கிறான் என்றார்.

அதற்கு பீர்பால், சில சமயம் முட்டாள்களிடம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதைத் தான் பேசாது வாய்மூடி மவுனமாகத் தெரிவிக்கின்றான் என்றார்.

முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைப்பற்றி அல்லது எதனைப் பற்றி அவர்களிடம் பேசினாலும் அவர்களால் தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் அறிவைப் புகழ்ந்து பாராட்டினார் அக்பர்

பிரபல்யமான பதிவுகள்