நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, செப்டம்பர் 02, 2022

போதும் என்ற மனமே,

போதும் என்ற மனமே
பொன் மனம்

 

 : أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَقال الله تعالي   

             لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ  :  قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم




போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சொல்வதுண்டு. ஆம்! பெரிய வசதி ஒன்றும் இல்லாவிட்டாலும் உள்ளதைக் கொண்டு நிறைவு செய்யும் மனம் படைத்தவர் சிறந்தவராவார். பணம் அதிகமாக இருப்பதைக் கொண்டு ஒருவரின் செல்வ நிலையை தீர்மானிக்கலாகாது. ஏனெனில், எத்தனையோ பணக்காரர்கள் நிறையப் பணம் இருந்தும் மனக்குறை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். போதுமென்ற மனம் இல்லாமல் மென்மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்களின் பேராசையைப் பார்க்கும்போது இவர்களை ஏழைகள் என்றே சொல்லத் தோன்றும். 

                                                               

أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ

(செல்வமும் மக்களும்) அதிகமாக வேண்டுமென்ற பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களை திசை திருப்பிவிட்டது. (எதுவரை எனில்) நீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரை. திருக்குர்ஆன் :- 102:1-2

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ) (வாழ்க்கையில்) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6446, முஸ்லிம்-1898, திர்மிதீ-2295, அல்அதபுல் முஃப்ரத்-276

 

உண்மையில் செல்வம் என்பது போதுமென்ற மனமே ஆகும். இருப்பதைக் கொண்டு நிறைவுசெய்து, இல்லாததன் மீது பேராசை கொள்ளாமல் இருப்பவனே செல்வந்தன் ஆவான். ஏனெனில், இவனிடத்தில்தான் செல்வந்தனின் தன்னிறைவு நிலை காணப்படுகிறது. ஆக,  மனவறட்சியே உண்மையான ஏழ்மையாகும். மனதிருப்தியே உண்மையான செல்வமாகும்.

 

வயிறு நிரம்பாதவர்

 

மேலும் செல்வத்தின் மீது அளவுகடந்து ஆசை கொள்கிறீர்கள். திருக்குர்ஆன்:- 89:20

 

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு, என்னிடம் நபியவர்கள், ( يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى ) "ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் அருள்வளம் செய்யப்படும். யார் மனதை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் அருள்வளம் செய்யப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேல் கைதான கீழ் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

 

நான், "நாயகமே! தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்பின், நான் இந்த உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் எதையும் கேட்டு (அவரது செல்வத்தை)க் குறைக்க மாட்டேன்" என்று கூறினேன்.

 

(இந்த நபிமொழியின் இரண்டாம் அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சி காலத்தில்) பெற்றுக்கொள்ளுமாறு ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை (பலமுறை) அழைத்தார்கள். ஆனால், ஹகீம் (ரலி) அவர்கள் அதை ஏற்க மறுத்து வந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஹகீம் (ரலி) அவர்களுக்குக் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்தும் எதையும் வாங்க மறுத்துவிட்டார்கள்.

 

ஆகவே, உமர் (ரலி) அவர்கள், ( إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ ) "முஸ்லிம் சமுதாயமே! (ஃபைஉ எனும்) இந்தப் பொது நிதியிலிருந்து தமது பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு ஹகீமை நான் அழைக்கிறேன். அதை அவர் ஏற்க மறுக்கிறார். என்பதற்கு நீங்களே சாட்சி" என்று கூறினார்கள். இவ்வாறு ஹகீம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பிறகு தாம் இறக்கும்வரை மக்கள் யாரிடத்திலும் எதையும் கேட்டுப் பெறவில்லை. நூல்:- புகாரீ-6441, முஸ்லிம்-1874, திர்மிதீ-2387

 

வெற்றி பெற்றுவிட்டார்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ) யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1903, திர்மிதீ-2271

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ ) ஒருவரது (வாழ்க்கையின்) இலட்சியம் மறுமையாக இருப்பின், அவரது உள்ளத்தில் (போதுமெனக் கருதும்) தன்னிறைவை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவருடைய (பிரச்சினைகளின்) சிதறல்களை அவருக்காக அவன் ஒருங்கிணைப்பான். இந்த உலகம் அவரைத் தேடிப் பணிந்து வரும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2389

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ ) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: ஆதமின் மகனே! (மனிதா!) என் வழிபாட்டிற்காக நீ நேரத்தை ஒதுக்கு! நான் உனது நெஞ்சத்தை (போதுமெனக் கருதும்) தன்னிறைவால் நிரப்புவேன்; உனது வறுமையை அடைத்தும் விடுவேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2390

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا أَرْضَاهُ بِمَا قَسَمَ لَهُ ، وَبَارَكَ لَهُ فِيهِ ، وَإِذَا لَمْ يُرِدْ بِهِ خَيْرًا لَمْ يُرْضِهِ بِمَا قَسَمَ لَهُ ، وَلَمْ يُبَارِكْ لَهُ فِيهِ ) அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ, அவருக்கு வழங்கப்பட்டதில் போதுமென்ற தன்மையை உண்டாக்கி, அதில் அவருக்கு (பரக்கத் எனும்) அருள்வளம் செய்து விடுகிறான். எவருக்கு அல்லாஹ் நலவை நாடவில்லையோ அவருக்கு போதுமென்ற தன்மையை இல்லாமலாக்கி அவருக்கு அருள்வளமும் செய்யாமல் விட்டு விடுகிறான். அறிவிப்பாளர்:- அபீல்அலாஇ பின் ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு அபீதுன்யா

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا ) "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தனிக்க தேவையான உணவை வழங்குவாயாக!" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-6460, முஸ்லிம்-1904

 

வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமான வசதியை பெற்றிருப்பவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராவார். பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தம்மையும் தம் குடும்பத்தாரையும் ஆளாக்கிவிடாமல் குடும்பத்தாரின் உணவுத் தேவையை நிறைவேறுகின்ற அளவிற்கு செல்வம் வழங்கிடுமாறு இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆகவே, தன்னிறைவோடும் உள்ளதை வைத்துப் போதுக்கிக்கொண்டும் வாழ்வதுதான் மேலானது.

 

பரவாயில்லை

 

உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  (ஒருமுறை பசியோடு இருந்த நிலையில்) எனது வீட்டுக்கு வந்து, ( هَلْ عِنْدَكُمْ شَيْءٌ ) "உங்களிடம் உண்பதற்கு ஏதாவது (உணவு) இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், ( لاَ إِلاَّ كِسَرٌ يَابِسَةٌ وَخَلٌّ ) "காய்ந்த ரொட்டித் துண்டுகள் சிலவற்றையும் சமையல் காடியையும் (வினிகர்) தவிர வேறெதுவுமில்லை (ஆனால், அதை உங்களுக்கு கொடுப்பதற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது)" என்றேன். நபியவர்கள், ( قَرِّبِيهِ فَمَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أُدْمٍ فِيهِ خَلٌّ ) "(பரவாயில்லை) அதைக் கொண்டு வாருங்கள்; (சமையல்) காடி இருக்கும் வீடு எதுவும் குழம்பற்ற வெற்று வீடாக இருக்காது" என்றார்கள்.

 

அந்த ரொட்டியின்மீது சிறிதளவு புளிக்காடியை ஊற்றி அதை சாப்பிட்டார்கள். அதன் பிறகு அல்லாஹ்விற்கு நன்றி சொன்னார்கள். மேலும், "ரொட்டியுடன் புளிக்காடி எவ்வளவு நன்றாக இருந்தது" என்று கூறினார்கள். திர்மிதீ-1765, இஸ்தம்திஃ பிஹயாதிக்க

 

ஆம்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்க்கையில் எது கிடைத்ததோ அதைக்கொண்டு திருப்தியோடு வாழ்ந்தார்கள். மேலும் உண்மை நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். வீண் விரயம் செய்யாமலும் கஞ்சத்தனம் செய்யாமலும் இருப்பதைக்கொண்டு திருப்தியுடன் வாழ்ந்த நபியவர்களின் நடுத்தரமான வாழ்க்கையை இது எடுத்துக்காட்டுகிறது

 

பழங்கள், தானியங்கள், சர்க்கரை போன்றவற்றைப் புளிக்க வைத்து தயாரிக்கப்படும் அமிலத்தன்மை கொண்ட திரவப் பொருளே காடி (Vinegar) ஆகும். இதனை உணவுக்கு குழம்பாகப் பயன்படுத்துவர். அரபியில் "கல்லு" என்றும் உருதுவில் "சிர்கா" என்றும் கூறுவர். இதில் அதிகமான மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளது. செரிமானம், கபத்தை அகற்றல், ரத்த ஓட்டத்தைச் சீராக்குதல் ஆகியவை அவற்றில் அடங்கும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

இப்னுல் கைய்யிம் (ரஹ்)  அவர்கள் கூறினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக ரொட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள், "வேறு குழம்பு அல்லது தொடு கறி உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "புளிக்காடி தான் உள்ளது. வேறு எதுவும் இல்லையே" என்றனர். அப்போது உணவு வைத்தவரின் மனதை நோகடிக்காதிருக்கவும் தம்மைத் திருப்திப்படுத்திக் கொள்ளவும் அவ்விதம் கூறினார்கள். “சிறந்த குழம்பு” என்ற சொல் அந்த நேரத்தில் புகழ்ந்து கூறப்பட்ட வார்த்தையானது, மற்ற உணவைவிட இதைச் சிறப்பிக்கும் நோக்கில் இவ்விதம் கூறவில்லை. அப்போது இறைச்சி, தேன் அல்லது பால் போன்ற பொருட்களில் இருந்து அவ்விதம் கூறியிருந்தால் புகழத்தக்கதாக இருந்திருக்கும். நூல்:-  அல்மவாஹிப்

 

விருந்தாளி

 

சவூதி நாட்டைச் சேர்ந்த அறிஞர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒருமுறை தன்னுடைய நண்பர் வீட்டிற்குச் சென்றான். அவனுடைய நண்பர் அவனுக்கு உண்பதற்கு ரொட்டியுடன் எண்ணைய்யையும் கொடுத்து விருந்தளித்தார். விருந்தாளியாக உள்ள அந்த நண்பன், "ரொட்டியுடன் வாசனை இலைகள் இருந்தால் நன்றாக இருக்குமே" என்று கூறினான். விருந்தளிப்பவர் தம்முடைய குடும்பத்தாரிடம் சென்று, "சிறிதளவு வாசனை இலைகள் இருக்கின்றனவா?" என்று கேட்டார். ஆனால், அவர்களிடம் எதுவும் இல்லை என்பதை அறிந்த அவர், அதன்பின் அதை வாங்குவதற்காக வெளியே சென்றார்.

 

ஆனால், அவரிடம் தேவையான பணம் இல்லை. கடைக்காரர் அதை அவருக்குக் கடனாகத் தர மறுத்துவிட்டார். எனவே, அவர் தம் வீட்டிற்குத் திரும்பி வந்து, அவர் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்வதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை எடுத்துச் சென்று கடைக்காரரிடம் அடமானமாக வைத்து வாசனை இலைகளை வாங்கி வந்து, அந்த விருந்தாளிக்குக் கொடுத்தார்.

 

அந்த விருந்தாளி சாப்பிட்டு முடித்த பிறகு, "எங்களுக்கு உணவளித்து, எங்களுடைய தாகத்தைத் தணித்து, எங்களுக்கு அளித்ததைக் கொண்டு எங்களைத் திருப்தியடையச் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்" என்று கூறினார்.

 

விருந்தளித்தவர் அதைக் கேட்டபோது வேதனையில் வெட்கப்பட்டு, உண்மையில் அல்லாஹ் உமக்கு அளித்ததைக் கொண்டு உன்னைத் திருப்தியடையச் செய்திருந்தால் என்னுடைய அங்கத்தூய்மை செய்யும் பத்திரத்தை அடமானம் வைத்திருக்க வேண்டியதில்லை" என்று கூறினார்.  நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் வாழ்வே வாழ்வு என்பார்கள்.

 

தம்மைவிட கீழானவர்களைப் பார்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ ) செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிட கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6490, முஸ்லிம்-5670

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ وَلاَ تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَهُوَ أَجْدَرُ أَنْ لاَ تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ )  உங்களுக்குக் கீழே இருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5671, இப்னுமாஜா

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நோய் அல்லது சோதனைகளால்) பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்தவர், ( الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً ) (பொருள்: உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து எனக்கு நிவாரணம் தந்த, அவனுடைய படைப்புகளில் அதிகமானோரைவிட என்னைச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக!) என்று கூறினால், அவர் வாழும் காலமெல்லாம் அந்த பாதிப்பிலிருந்து அவர் பாதுகாப்புப் பெறுவார். அறிவிப்பாளர்:-  உமர் (ரலி) அவர்கள்

 

இந்த நபிமொழி அறிவிப்பாளர்கள் தொடரில் வரக்கூடிய அபூ ஜஅஃபர் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்து பாதுகாப்புக் கோருபவர் அதனைத் தன் மனதிற்குள் கூறிக் கொள்வார். பாதிப்புக்குள்ளானவர் கேட்கும் விதத்தில் (உரத்து அவருக்கு முன்பாக) கூறமாட்டார். நூல்:- திர்மிதீ-3343

 

நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர, இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.

 

அல்லாஹ்,  நம் ஒவ்வொருவருக்கும் நிறையவே தந்திருக்கின்றான். அவன் நமக்கு எதையெல்லாம் தரவில்லை என்று எண்ணிப்பார்த்து கவலைப்படுவதைவிட, எதையெல்லாம் தந்திருக்கின்றான் என்பதை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷமாக வாழும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதே நிறைவான வாழ்வு வாழ வழி.

 

போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர். இருப்பதை வைத்து நிறைவாக வாழக் கற்றுக்கொண்டவர். இவர்தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுகிறார்.

 

செல்வம், அழகு, குழந்தைகள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட வாழ்க்கை ஆதாரங்களில் நம்மை விட மேலானவர்களைக் காணும்போது மனம் சஞ்சலப்படும். ஏக்கம் உண்டாகும். சில வேளைகளில் பொறாமைகூட ஏற்படலாம். இதைத் தவிர்க்க நல்ல வழி என்னவென்றால், நம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களை நினைப்பதுதான். அப்போது மனதுக்கு ஆறுதலும் தெம்பும் ஏற்படும். போதுமென்ற மனநிலை உருவாகும். மேலும், கொந்தளிப்பு இல்லாத வாழ்க்கைக்கு இந்த அறிவுரை துணை நிற்கும். அதே நேரத்தில், தொழுகை, தர்மம் போன்ற நற்செயல்கள் புரிவதில் நம்மைவிட மேலானவர்களையே கவனிக்க வேண்டும். இது மென்மேலும் நற்பணிகள் ஆற்ற தூண்டுகோலாக அமையும்.

 

பணம் இல்லாதவர் ஆரோக்கியம் இருக்கிறதே என்று ஆறுதல் அடையலாம். ஆரோக்கியத்தை இழந்தவர் அறிவு இருக்கிறதே என்று ஆறுதல் அடையலாம். அடுத்தவரிடம் இருப்பதைப் பார்த்து, அதை நினைத்துக் கவலைப் படுபவர்களாக ஒருபோதும் இருக்கக்கூடாது.

 

ஒன்றைப் பெறவேண்டுமென்றால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். கிடைக்கவில்லையா? கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்; இல்லாததை நினைத்துக் கவலைப்படாமல், இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தன்னைவிட கீழ் நிலையில் இருப்பவரைப் பார்த்து தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தியடைய வேண்டும்.

 

அழகில் குறைந்தவர் தன்னைவிட அழகில் குறைந்தவரைப் பார்க்க வேண்டும்; உடல் ஊனமுற்றவர்களை காணும்போது இந்த “அழகு குறைவு” என்பதெல்லாம் ஒரு குறையாகவே தெரியாது. அப்போது இப்படி ஊனமில்லாத உடல் உறுப்புகளை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றானே என்று மனநிறைவோடு அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக நாம் மாறுவோம்.

 

மேலும், உடல் ஊனமுற்றவர்கள்  தங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது மன நிம்மதி அடையலாம். ஒரு கண்ணை இழந்தவர் இரு கண்களை இழந்தவரைப் பார்த்தும், இரு கண்களை இழந்தவர் கை, கால்களை இழந்தவரைப் பார்த்தும், ஒரு கையை இழந்தவர் இரு கைகளை இழந்தவரைப் பார்த்தும் ஆறுதல் பெற முடியும்.

 

நோயுள்ளவர்கள் தங்களை விட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோரைப் பார்க்க முடியும். இவர்களை ஒரு நோயாளி பார்க்கும் போது, நமக்கு அல்லாஹ் அளித்திருக்கும் இந்த நோய் அவர்களுக்கு வந்திருக்கும் நோயை விட எவ்வளவோ குறைவானது  என்பதை உணர்வார். இதை நினைத்து "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி, கவலையை மறந்து, தன் வாழ்வை இனிதே அமைத்துக் கொள்வார்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒருவர் தன்னிடமுள்ளதைக் கொண்டு தன்னிறைவு அடைவதோடு தனக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் அடைகின்றபோது  அவரிடம் குடிபுகுந்த பொறாமை, ஆற்றாமை, பேராசை, காழ்ப்புணர்ச்சி, கவலை, அதிருப்தி, விரக்தி முதலானவை அகன்று உள்ளத்தில் அமைதி குடியேறும்; மனம் நிறைவு பெறும். அவர் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார். இந்த அற்புதமான, நடைமுறைக்கேற்ற உளவியல் வழிக்காட்டலை கற்றுத் தந்துள்ளார்கள்.

 

இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் மனோநிலையை வளர்த்துக்கொள்ள துணைபுரியும் மற்றும் சில வழிகாட்டல்களையும் இங்கே பார்க்கலாம்.

 

அல்லாஹ் தான் (ரஸ்ஸாக்) ஆகாரம் அளிப்பவன் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

உலக வாழ்வு நிலையற்றது; அது முடியக்கூடியது, அழியக்கூடியது என்ற உண்மையை அடிக்கடி நினவு கூர வேண்டும்.

 

வீண்விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

கையேந்த வெட்கம்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  அவர்கள் கூறியதாவது. என்னுடைய தந்தை உஹுது யுத்தத்தில் உயிர்த்தியாகியாக இறந்துவிட்டார். அவர் எங்களையெல்லாம் வறுமையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். நாங்கள் ஏழை குடும்பமாக இருந்தோம். மிகவும் வறுமையில் இருந்தோம். ஒருமுறை என் தாயார் என்னை அழைத்து, "நீ அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நம் நிலையை எடுத்துச் சொல். அவர்கள் நமக்காக ஏதாவது கொடுப்பார்கள்" என்று கூறினார்கள். எவரிடமும் கையேந்தி பழக்கப்படாத நான் இப்போது கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். நேராக பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்காக வந்தேன்.

 

அங்கு நபியவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்று, "மக்களே! இனி நீங்கள் யாரிடத்திலும் யாசகம் கேட்காமல் இருப்பதற்கான நேரம் வந்துவிட்டது. உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள நேரம் வந்து விட்டது. யார் பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையோடு இருந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழ வைப்பான். யார் தம்மைத் தாமே நிறைவாக்கி கொடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு அல்லாஹ் நிச்சயமாக செல்வத்தைக் கொடுத்து நிறைவாக்குவான். அல்லாஹ்வின் மீதாணையாக! உலகத்தில் அல்லாஹ் எல்லோருக்கும் கொடுக்கின்ற (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தில் பொறுமையைவிட சிறந்த ரிஸ்க் வேறு எதுவுமில்லை. நீங்கள் யாசகம் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்றால் என்னிடம் உள்ளதை கேளுங்கள் நான் உங்களுக்குத் தருகிறேன்" என்று உரையாற்றி கொண்டிருந்தார்கள்.

 

ஏற்கனவே கேட்கலாமா? வேண்டாமா? என்று தடுமாற்றத்தில் இருந்த நான் நபியவர்களின் அறிவுரையைக் கேட்டபின், நபியவர்களின் எதையும் கேட்காமல் தொழுதுவிட்டு அப்படியே வீட்டிற்கு வந்துவிட்டேன்.  வீட்டிற்குச் சென்று விஷயத்தை கூறினேன். “நபியவர்கள் சொற்பொழிவைச் செவியுற்ற பின்னர் என்னால் கேட்க முடியவில்லை” என்று கூறினார்கள்.

 

இரண்டாவது தடவை ஒருநாள் நபியவர்களிடம் கேட்கச் சென்றேன். அப்போதும் நபியவர்கள் யாசிப்பதை இகழ்ந்து கூறிக் கொண்டிருந்தார்கள். "மனதுக்குள் போதுமென்ற தன்மை இருக்கிறது. ஒவ்வொருவரின் மனதுக்குள் செல்வம் இருக்கிறது. மனது செல்வந்தனாக ஆகிவிட்டால் போதும். மனிதன் யாரிடமும் கையேந்த மாட்டான்" என்று நபியவர்கள் கூறியதை கேட்டதும் நபியவர்களிடம் உதவி கேட்க எனக்கு தோன்றவில்லை. நூல்:- முஅஜமுஸ் ஸஹாபா

 

நபித்தோழர்களில் பலரும் கடுமையான வறுமை வாட்டிய போதும்கூட பிறரிடம் கையேந்த வெட்கப்பட்டுள்ளார்கள்.

 

நற்பேறற்றவன்

 

ஆகவே, மனிதனின் நிலை என்னவெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடி அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை கண்ணியப்படுத்திவிட்டான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். மேலும், (இறைவன்) அவனைச் சோதிக்க நாடி அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான். திருக்குர்ஆன்:- 89:15,16

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ ) பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் நற்பேறற்றவன் ஆவான். அவனுக்கு செல்வம் வழங்கப்பட்டால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6435

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ )  (செல்வத்தின்மீது பேராசையுள்ள) அவன் இழப்புக்குரியவனாகட்டும்! அவன் அழியட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்! நூல்:- புகாரீ- 2887

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ كَانَ لاِبْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًا آخَرَ وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ )  மனிதனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும் அதைப் போன்று மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனது வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இதுபோன்ற பேராசையிலிருந்து) திருந்திப் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1895

 

செல்வத்தையும் ஏனைய வளங்களையும் அவனது ஞானத்தின் அடிப்படையில் மனிதர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக பகிர்ந்தளிக்கின்றான்; அந்த வகையில் எனக்கென்று அவன் நிர்ணயித்தைத்தான் நான் பெற்றுக்கொள்வேன் என்ற உண்மையை புரிந்து வைக்க வேண்டும்.

 

உலக வாழ்க்கையில் வறுமையும், பிற கஷ்ட, நஷ்டங்கள் மட்டுமன்றி செல்வமும் ஏனைய அருள்களும்கூட சோதனைகளே என்ற உண்மையை அறிய வேண்டும்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள், அவர்களின் குடும்பத்தார், நபித்தோழர்கள், நமது நல்லோர்களான முன்னோர்கள் எல்லாம் எப்படி, எவ்வாறு இருப்பதைக் கொண்டு பூரண திருப்தியுடன் வாழ்ந்தார்கள் என்பது தொடர்பில் பார்க்க வேண்டும்;படிக்க வேண்டும்.

 

இருப்பதைக் கொண்டு திருப்திகொள்ள இந்த நம்பிக்கைகளும் பார்வைகளும் நிச்சயம்  உதவும்.

 

“வெளுத்துக் கட்டிய வேட்டியில் திருப்தி கண்டவனும் உண்டு. சலவை வேட்டியில் (புத்தாடை) சரியில்லை என்று சலித்துக்கொண்டவனும் உண்டு” என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا ) உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் விஷயத்தில் அச்சமற்றவராக, தம் உடல் விஷயத்தில் ஆரோக்கியம் பெற்றவராக இருந்து, அவரிடம் அன்றைய தினத்துக்குத் தேவையான உணவும் இருந்துவிட்டால், அவருக்கு இவ்வுலகமே முழுவதாக வழங்கப்பட்டுவிட்டதைப் போன்றுதான். அறிவிப்பாளர்:- உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் அல்கத்மீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2268

 

போதுமென்ற மனதோடும் மனநிறைவோடும் வாழ்வதற்குப் மேற்காணும் ஒரு நபிமொழியே போதுமானதாகும்.

 

கல்வியைத் தேடுவதில்  

 

"என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்துவாயாக!" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 20:114

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( وَبَعْدَ أَنْ تُسَوَّدُوا وَقَدْ تَعَلَّمَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِبَرِ سِنِّهِمْ ) நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (சட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்). ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் முதுமைப் பருவத்திலும்கூடக் கல்வி கற்றுள்ளனர். நூல்:- புகாரீ பாடம்-15 கல்வியிலும் ஞானத்திலும் பொறாமை கொள்வது

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிந்துக்கொள்வதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களைத் தேடி ஒரு மாதத் தொலை தூரத்திற்கு (சிரியா நாட்டுக்கு)ப் பயணமானார்கள். நூல்:-  புகாரீ பாடம்-19 கல்வியைத் தேடி புறப்படுவது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அன்சாரி நண்பர்களில் ஒருவரிடம், "இன்றைக்கு நபித்தோழர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வாருங்கள்! அவர்களைத் தேடிப்போய் நபிமொழிகளை கற்போம்" என்று அழைத்தார்கள். அவரோ, "என்ன ஆச்சரியம்! (உம்மை மதித்து) உம்மிடம் மக்கள் ஓடி வந்து நமக்குச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கருதுகிறீரா?" என்று சொல்லிவிட்டார்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தாமே அன்சாரித் தோழர் ஒருவரைத் தேடி சென்றபோது, அந்த அன்சாரித் தோழர் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடனே அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் துண்டை தலைக்கு வைத்து அவரது வாசலிலேயே படுத்துவிட்டார்கள். காற்றடித்து மண்ணை வாரி அன்னார் மீது இறைத்தது.

 

பின்னர் அந்த அன்சாரித் தோழர் வெளியே வந்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை பார்த்துவிட்டு, "நபியவர்களுடைய தந்தையின் சகோதரர் மகனே! இங்கு நீங்கள் வரக் காரணம் என்ன? என்னை கூப்பிட்டு இருந்தால் நானே உங்களிடம் வந்திருப்பேனே!" என்று கூறினார். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை! நான் உங்களைத் தேடி வந்து நபிமொழிகளை கேட்டு அறிவது தான் முறையாகும்" என்று கூறினார்கள்.

 

அந்த அன்சாரி  நபித்தோழர் பிற்காலத்தில் ஒரு தடவை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைக் கண்டார். அப்போது அன்னாரைச் சுற்றி மக்கள் குழுமியிருந்து நபிமொழிகளை கேட்டு அறிந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அவர் "இந்த இளைஞர் என்னைவிடப் பெரிய புத்திசாலி" எனப் பாராட்டினார். நூல்:-  முஸ்னது தாரமீ

 

கல்வியைத் தேடுவதில் போதுமென்ற மனநிலை வந்துவிட்டால், அல்லாஹ் அவருக்கு கல்வியின் வாசலை மூடிவிடுவான் என்கின்றனர் அறிஞர்கள். அதனால் தான், நமது முன்னோர்களான மார்க்க அறிஞர்கள் பலரும் மரணமாகும் தருணம் வரை கல்வியைத் தேடிக்கொண்டேயிருந்தார்கள்.

 

வணக்க வழிபாட்டில்

 

உமக்கு  உறுதி ( எனும் மரணம்) வரும்வரை உம்முடைய இறைவனை வழிபடுவீராக! திருக்குர்ஆன் :- 15:99

 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள். கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ ) "அப்துல்லாஹ், நீ பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!" என்று கேட்டார்கள். நான், ஆம்! நாயகமே!" என்றேன். நபியவர்கள், ( فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ ) "(இனி) அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள்) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக (சிறிது நேரம்) உறங்குவீராக!" என்றார்கள். நூல்:- புகாரீ-1975

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக பேராசான் நபித்தோழர்களில் சிலர் பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (சென்று) நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியை கேட்ட) அவர்களில் ஒருவர், ( لاَ أَتَزَوَّجُ النِّسَاءَ ) "(வழிபாடு புரிவதில் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக) நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்" என்று கூறினார். மற்றொருவர், ( لاَ آكُلُ اللَّحْمَ ) "(வழிபாடு புரிவதில் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக) நான் புலால் உண்ண மாட்டேன்" என்றார். மற்றொருவர், ( لاَ أَنَامُ عَلَى فِرَاشٍ ) "(இரவில் வழிபாடு புரியவேண்டும் என்பதற்காக) நான் படுக்கையில் உறங்க மாட்டேன்" என்றார்.

 

(இதை அறிந்த) நபியவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, ( مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي  ) "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படி எல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டுவிடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-2714

 

நபித்தோழர்கள் இறைவழிபாட்டில் மனநிறைவு கொள்ளாதவர்கள். அதில் அதிக ஆசையும் ஆர்வமும் உள்ளவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்  தமது தோழர்கள் இறைவழிபாட்டில் கொண்ட ஆர்வத்தை கண்டு பெருமிதம் கொண்டாலும், தமது உடலுக்குரிய, தமது மனைவிக்குரிய கடமைகளை மீறியவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆர்வத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தினார்கள்.

 

தொழுகை, நோன்பு, ஸகாத், தர்மம், குர்ஆன் ஓதுதல், இறைதியானம் (திக்ர் தஸ்பீஹ்) போன்ற இறைவழிபாட்டில் போதுமென்ற மனநிலை வரக்கூடாது. அப்பாடா, நாம் ஓரளவு வழிபாடுகள் புரிந்துவிட்டோம். நமக்கு இது போதும் என்ற மனநிலை வரக்கூடாது. மாறாக, நாம் எவ்வளவு அதிகமாக வழிபாடு புரிந்தாலும், நாம் என்ன பெரிதாக வழிபாடு புரிந்து விட்டோம்? இது போதாது. இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற பேராசையின் மனநிலை வரவேண்டும்.

 

சுருங்கக்கூறின், பயனளிக்கும் கல்வியைத் தேடுவதிலும் வணக்க வழிபாட்டிலும் போதுமென்ற மனம் வரக்கூடாது. மற்ற உலக காரியங்களில், கிடைத்ததைக்கொண்டு போதுமென்ற மனம் நிறைவோடு வாழ்ந்துப் பழகவேண்டும்.

 

மோதுமென்ற மனநிறைவோடும்,  நமக்கு கிடைக்கப்பெற்றவைகளை எண்ணி, அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டக்கூடிய நற்பண்பாளர்களாகவும் அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்

பிரபல்யமான பதிவுகள்