சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது
மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகையும் வழங்கப்படும். அதேப் போன்று, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் www.scholarships.gov.in என்னும் தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் சார்பில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தங்களது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி முறைகள்
http:www.minorityaffairs.in/schemes
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக