குகைவாசிகளும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا (9)
'குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சர்யமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா? (அல்குர்ஆன் 18:09)
என்று இவ்வரலாற்றை அல்லாஹ் கூறத் துவங்குகின்றான். இந்த சூராவில் 26 வசனங்கள் இச்சம்பவத்தைத் தெளிவாக விபரிக்கின்றன. இதன் விரிவுரை பின்வருமாறு: பல தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் அநியாயம் செய்பவர்களாகவும் வாழ்ந்து வந்த ஒரு சமுதாயத்தில் ஏக இறைவனைப் பற்றி அறிந்து அவன் மீது சில இளைஞர்கள் நம்பிக்கை கொண்டனர். விஷயம் அறிந்து அந்த அரசன் அவர்களை அழைத்தான். அவனிடம் தைரியமாக இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துரைத்தனர். அவன் அதை ஏற்கவில்லை. அத்துடன் அந்த இளைஞர்களின் ஆடையைக் கழற்றக்கூறி தனது ஆட்களுக்கு உத்தரவிட்ட போது தன் மானத்தைக் காப்பாற்ற அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஒரு குகைக்குள் தஞ்சமடைந்தனர். குகைக்குள் நுழைந்தவுடன் அந்தக் குகை மாயமாகி விட்டது.
குகையில் அவர்கள் தஞ்சமடைந்தவுடன் அவர்களை 300 வருடங்கள் அல்லாஹ் தூங்க வைத்து விடுகிறான். ஊரை விட்டு அவர்கள் ஓடும் போது, தங்களுடன் ஒரு நாயையும் அழைத்துச் சென்றனர். அந்த நாயும் அவர்களுடன் சேர்ந்து 300 வருடங்கள் தூங்கியது. அந்த நாய் குகை வாசல் மீது படுத்திருக்கும் அந்தக் கோலம் பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தும். இத்தகைய ஏற்பாடுகளைச் செய்து மற்றவர்கள் கண்களில் படாமல் அவர்களை அல்லாஹ் பல வருடங்கள் வைக்கிறான். இதை கஹ்ஃப் சூராவின் 17, 18, 11 ஆகிய வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இப்படியே பல காலங்கள் ஓடுகின்றன. இவர்களுடைய சம காலத்தவர் அனைவரும் மரணித்து விடுகின்றனர். அந்த ஊரில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் பின்பு 300 வருடங்கள் கழித்து அல்லாஹ் அவர்களை விழிக்கச் செய்கின்றான். எத்தனை ஆண்டுகள் தூங்கினோம் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஒருநாள் அல்லது அதற்கும் குறைவாகவே தாங்கள் தூக்கத்தில் இருந்ததாக அவர்கள் நினைக்கின்றனர். விழித்தவுடன் பசி ஏற்பட, தங்களில் ஒருவரை உணவு வாங்கி வர அனுப்புகின்றார்கள். எந்த சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் குகையில் தஞ்சம் அடைந்தார்களோ அந்தச் சமுதாயம் தான் ஊரில் உள்ளது என்று நினைத்து ஒளிந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் உணவு வாங்கி வர அவர் சென்றார். ஆதி கால மனிதரைப் போன்ற அவரது தோற்றத்தையும் அவரிடமிருந்த பழங்கால நாணயங்களையும் பார்த்த கடைக்காரர் அவரை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த அரசரிடம் அழைத்துச் சென்று விடுகிறார்.
அந்த அரசர் இவரின் பெயரைக் கேட்டவுடன் இவர்கள் குகைவாசிகள் என்பதை அறிந்து கொண்டார். ஏனெனில் இவர்கள் பற்றிய விபரங்கள் அரசாங்கத்தின் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருந்தன. உங்களுடைய நண்பர்களை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூற, வாருங்கள் என்று கூறி அவர் குகைக்கு அழைத்துச் செல்கிறார்.
அரசரும் அவருடைய ஆட்களும் பின்தொடர்ந்து செல்ல, அவர் முன்னால் செல்கிறார். குகைக்கு அருகில் சென்றதும் முன்பு போலவே அந்தக்குகை மாயமாகி விட்டது. ஆனால் இந்த முறை அல்லாஹ் அவர்களை மவ்த்தாக்கி விட்டான். ஆனாலும் அந்தக் குகையைப் பற்றிய விபரங்கள் நீண்ட காலங்கள் மர்மமாகவே இருந்தன. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கூட சில சஹாபாக்கள் அக்குகையை நெருங்க முயன்ற போது புயல் காற்று நெருங்க விடாமல் தடுத்தது.
குறிப்பிட்ட காலங்கள்வரை அல்லாஹ் அவ்வாறு மர்மமாக வைத்திருந்தான். ஆனால் தற்போது அக்குகையைப் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தக் குகை தற்போது ஜோர்டான் நாட்டின் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் உள்ளது.
18:9) வது வசனத்தில் குகைவாசிகளைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். ஆனால் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியவர்கள்(சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு சுவடி இவர்களுடைய வரலாற்றுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதுபற்றிய விபரம் கண்டறியப்பட்டுள்ளது.
சுவடி உடையவர்கள் என்ற வார்த்தையின் விளக்கம்
وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس : الرَّقِيم الْكِتَاب (تفسير ابن كثير)
"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்" என்ற தலைப்பில் 1998ல் பி.பி.சி. தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
1947ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன் காணாமல் போன தனது ஆட்டுக்குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அப்பகுதி "கும்ரான் மலைப் பகுதி" என்று அழைக்கப்படுகிறது.
ஆட்டுக் குட்டியைத்தேடிய சிறுவன் அங்குள்ள குகைக்குள் பார்த்தபோது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்டிருந்த தோல் ஆவணங்களைக் கண்டான். அவைகளில் சிலதை எடுத்து வந்து செருப்புத் தைக்கும் தொழிலாளியான தனது தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப்பழைய தோல்களைத் தன் செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார். கிறிஸ்தவரான புத்தகக் கடைக்காரர் அச்சுருள்களை அந்நகரில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் தெரியவர அதிலுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர். அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும்" என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறிஸ்தவப் பாதிரிகள் "அது தனியார் சொத்து" என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்தனர். கிறிஸ்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெரூஸலத்தில் இருந்த பாதிரிகள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த குகைகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்களனைத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
1952 செப்டம்பரில் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. சுமார் பதினைந்தாயிரம் கையெழுத்துப் பிரதிகள் இவர்களிடம் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டு உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை குறிப்பிட்ட கிறிஸ்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.
பல்வேறு கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிக்க ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிக்க உரிமை வழங்கப்பட்டு வந்தது. இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அந்தச் சாசனங்களை நுண்ணிய படச்சுருளாக எடுத்தார்கள். அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அந்நூலகத்தின் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்தச் சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டியும் அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டவர். இப்போது தன்னுடைய அதிகாரத்திலுள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார். அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக அவர் வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறிஸ்தவ சபை அந்த சாசனச் சுருள்களை பிறருக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார். மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ருமொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 கையெழுத்துப்பிரதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்து வெளியிட்டார். அந்தப் புத்தக வெளியீடு கிறிஸ்தவ உலகத்தை உலுக்கியது என்றும், கிறிஸ்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார். எது நடந்தாலும் சரி அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அந்த இரண்டு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்துள்ளது.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன. அச்சாசனச் சுருள்களில் உள்ளவை குர்ஆனை ஒத்திருக்கின்றது என்பதுதான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
சிரமமான நிலையிலும் ஹலாலைப் பேணிய குகைவாசிகள்
وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا (19)الكهف
{فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَاماً} قال ابن عباس: أحل ذبيحة؛ لأن أهل بلدهم كانوا يذبحون على اسم الصنم، وكان فيهم قوم يخفون إيمانهم. ابن عباس: كان عامتهم مجوسا.(قرطبي
300 வருடங்கள் தூங்கி எழுந்தவுடன் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது தங்களில் ஒருவரை உணவு வாங்க அனுப்பும்போது ஹலாலான உணவாகப் பார்த்து வாங்கி வா என்று கூறி அனுப்பினார்கள். காரணம் அந்த ஊரில் நிறைய பேர் மஜூஸிகள். சிலர் மட்டும் மறைவாக ஈமான் கொண்டிருந்தனர். அத்தகைய ஈமான் தாரிகள் அறுத்த உணவையே வாங்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்கள்
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் முறையான அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود) باب فِى اجْتِنَابِ الشُّبُهَاتِ.
பொருள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு தோண்டுபவரிடம் மய்யித்தின் தலை வைக்கும் பகுதியையும், கால் வைக்கும் பகுதியையும் பெரிதாக தோண்டுங்கள் என அறிவரை கூறக் கண்டேன். அங்கிருந்து திரும்பியவுடன் ஒரு பெண்ணின் சார்பாக விருந்துக்கு அழைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள். பின்பு உணவு கொண்டு வரப்பட்டது. அதில் கை வைத்து அவர்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாயில் ஒரு கவளத்தை மட்டுமே விழுங்கியதை எங்களின் தந்தைமார்கள் கண்டார்கள். பின்பு எங்களிடம் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியாக இதை நான் காண்கிறேன் என்றார்கள். பின்பு விருந்து கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு அனுப்ப அப்பெண் யாரஸூலல்லாஹ் எனக்கு ஒரு ஆடு வேண்டும் என பகீஉக்கு ஆள் அனுப்பினேன். அங்கு கிடைக்கவில்லை. பிறகு என் அண்டை வீட்டாரிடம் சென்று எனக்காக ஆடு வாங்கி வரும்படி ஆள் அனுப்பினேன். அவரும் இல்லை. பின்பு என் அவருடைய மனைவியிடம் கேட்டு அனுப்ப அவர் இந்த ஆட்டைக் கொடுத்தனுப்பினார் என்று கூற பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இறைச்சியை தான் சாப்பிடாமல் காஃபிர்களான கைதிகளுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக